158 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
25 திரையுலகக் கற்பு கலிவெண்பா தென்னாட்டுப் பண்பனைத்துஞ் சேர்த்தெடுத்துக் காணுங்கால் இந்நாட்டுக் கற்புநெறி ஈடில்லாப் பொற்புநெறி என்றே இலக்கியங்கள் எக்காலும் ஓதிவரும்; இன்றோ அதன்நிலைதான் ஏளனத்தின் கூடாரம்! ஏற்றமிகும் கற்புநெறி இங்கே திரையுலகில் நாற்றம் எடுத்தொழிய நாடகங்கள் ஆடுகின்றார்; யாரும் அறியா தகத்தே நிகழ்வதெலாம் பாரும் எனக்காட்டிப் பண்பை அழிக்கின்றார்; கூடும் அகத்திணையைக் கூத்தாட்டக் காரரிவர் ஆடும் புறப்பொருளை ஆக்கிப் படைக்கின்றார்; மேடை மிசையேறும் மெல்லியலார் நல்லுடலில் ஆடை அணிவதற்கே அச்சப் படுகின்றார்; சுட்டெரிக்கும் போதில் சுருண்டுவிழும் ஓர்புழுப்போல் வட்டமிட்டு மேனி வளைத்து நெளிந்தவர்தாம் தாயாகும் பண்பைத் தவிடுபொடி யாக்கிவிட்டுப் பேயாட்டம் ஆடிப் பெரும்பழியைச் சேர்க்கின்றார்; கற்புநெறி யிங்கே கடைச்சரக் கானதலால் மற்றபடி உண்டோ மதிப்பு? - 1.3.1970 |