பக்கம் எண் :

162கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

எட்டுணையின் அளவேனும் உண்மை யின்றி
      ஏய்க்கின்றார் கடவுளையே என்றால், பக்தி
மொட்டவிழும் என்றின்னும் நம்ப லாமோ?
      மூடமதிச் செயலுக்கா பக்தி யின்பேர்?

தெருவோரம் குத்துக்கல் தெரிந்தாற் போதும்
      சிலநாளிற் கடவுளென அதன்பேர் மாறும்;
திருநீறும் குங்குமமும் ஒருநாள் தோன்றும்;
      சிலமலர்கள் அதன்தலைமேல் மறுநாள் தோன்றும்;
வருவோரும் போவோரும் அதனைக் கண்டு
      வழிநின்று வியந்துபல பேசிச் செல்வர்;
மறுநாளே பாவாடை யம்ம னாகும்
      மலர்சூடம் ஊதுபத்தி வாடை வீசும்.

பாவாடை யம்மனுக்கு வெள்ளி செவ்வாய்
      பாலாலே அபிடேகம் நடக்கும்; அங்கே
பூவோடு வருமாதர் கூட்டம் சேரும்;
      பூவாடைப் பக்தர்களின் குழுவும் கூடும்;
போவாரும் வருவாரும் மிகுத லாலே
      பொலிவுள்ள உண்டியலும் அங்கே தோன்றும்;
ஓவாதே உண்டியலும் நிறைவ தாலே
      உள்நாட்டுப் பூசல்களும் மிகவே தோன்றும்,

குத்துக்கல் சாமிக்குச் செல்வம் பொங்கிக்
      குவிகின்ற நிலைவரலும் உரிமைக் காகப்
பத்தருக்குள் அடிதடிகள் குத்து வெட்டுப்
      பரிமாறல் தவறாமல் நடப்ப துண்டு;
குத்துக்கல் எனதென்றே ஒருவன் சொல்வான்;
      குங்குமத்தை முதன்முதலில் நான்தான் போட்டுப்
பத்திக்கு வழிவகுத்தேன் என்பான் மற்றோன்;
      பணமெனக்கே சொந்தமென்பான் இடத்துக் காரன்