வெள்ளிமணி, தங்கமணி, *அக்கு மாலை, வேடத்தால் பொலிகின்ற சமயச் சின்னம், வெள்ளமென வருதிரளில் ஓடும் தேர்கள், வீதியிலே கண்டபடி செய்யும் பூசை, கொள்ளைநிதி மிகத்திரட்டி இறைவன் பேரால் கூத்தாடல், எனுமிவைதாம் பக்தி யல்ல; உள்ளமதில் தூய்மைநிலை இல்லை என்றால் ஒவ்வொன்றும் வெளிப்பகட்டுச் செயலே யாகும். காயமிது மாயமென்பார், காய கல்பம் கண்டருந்தித் தம்முடலைக் காயம் செய்வார்; மாயமடா இவ்வுலகம் என்பார், நம்மை மயக்கிமிகப் பொருள்தொகுக்க மாயம் செய்வார்; தேயுமடா சிற்றின்பம் என்பார், அந்தத் தெரிவையர்தம் நலம்நினைந்தே தேய்வர் நாளும்; சாயமெலாம் வெளுத்திடினும் மீண்டும் பூசித் தம்வாழ்வைப் பக்தியினால் மெருகு செய்வார். நிலையாமை உணர்த்துவதே பக்தி என்றால் நீணிலத்தை வெறுத்துவிடல் பக்தி யன்று; நிலையாமை தனையுணர்ந்தே உலக வாழ்வில் நிலைத்தசெயல் செய்வதுதான் பக்தி யாகும்; கலையாமல் தன்மனத்தைக் கட்டுப் பாட்டில் கட்டுறுத்துக் கடமைகளைச் செய்வ தொன்றே உலையாத கண்ணியஞ்சேர் பக்தி யாகும்; உலகத்தை விரும்புவதே உயர்ந்த பக்தி. மேலுலக வாழ்வுக்கு வழியைக் காட்ட மேன்மை பெறும் இவ்வாழ்வை மாயம்என்போர் பாலுடனே முந்திரிகைப் பழங்கள் உண்டு பயன்பெறுவர் பணம்பெறுவர் பக்தி என்பர்;
* அக்குமாலை - உருத்திராக்கமாலை |