பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்167

இன்னும் மனிதரெனும் பேரால் இயங்குகிறோம்;
விண்ணிற் பறக்கின்றோம் வெற்றி சிறக்கின்றோம்
எண்ணிற் பெருமைஎலாம் எண்ணில் அடங்காவே!
ஆழ்புனலில் மூழ்குகிறோம் ஆங்கெழிலா நீந்துகிறோம்
சூழ்பெருமை அத்தனையும் சொல்லுக் கடங்காவே!
என்று பறைசாற்றி எக்களித்து நிற்கின்றோம்.
நன்றுநன் றென்றாலும் நாணும் நிலையுளோம்;
நம்மிற் பறவையினம் நன்றே பறப்பதுண்
டிம்மி யளவும் இரும்புனலில் நீந்துவதில்
மீனிற் சிறக்கவிலை மேன்மை நமக்கேது?
வானிற் படுதோல்வி! வார்புனலில் அத்தோல்வி!
விண்ணகத்தும் நீரகத்தும் வெற்றி இலைஎனினும்
மண்ணகத்து வெற்றிஎதும் வாய்த்ததுவோ? வாயில்லை;
காட்டில் விலங்கினமுங் கண்டபடி தானடக்கும்
நாட்டில் திரிகின்ற நம்நடையும் அப்படியே;
நல்ல நடையுண்டா? நம்நடையில் செம்மையுண்டா?
இல்லை பொலிவுண்டா? ஏனோ முடமானோம்?
கற்கின்றோம் நூல்கள் கசடறவே, கற்றவணம்
நிற்கின்றோம் என்றுரைக்க நீதியுண்டா? நன்கு
நடக்காமல் நிற்கின்றோம்; நாவன்மை கொண்டோம்
அடுக்காத தீச்செயல்கள் ஆயிரமே செய்தாலும்
மூடி மறைப்பதற்கே முன்கற்ற கல்வியிலே
தேடி அலைந்து தெரிவிப்போம் சான்றுகளும்;
கற்றார், பழிக்குக் கடுகளவும் நாணவிலை;
மற்றார் அதற்கு மனங்கூசி நிற்பர்;
உரிமை உரிமைஎன்றே ஒயாமற் சொல்லி
மருவும் உரிமை மனிதர்பொதுச் சொத்தாக
எண்ணா தலைகின்றோம் ஏய்த்துத் திரிகின்றோம்