பக்கம் எண் :

172கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

அச்சுப் பொறியில்லாக் காலம் அவன்காலம்
நச்சிப் படியெடுத்தார் நாவலன்றன் பாடல்களை
ஏட்டில் எழுதும் எழுத்தாணிப் போக்கினிலே
ஓட்டிக் கெடுத்தார்கள்; ஓதியநற் பாடல்களை
வாய்மொழியாற் சொன்னவரும் வாய்போன போக்கினிலே
போய்மகிந்தார்; பின்னர்ப் புகுந்துவிட்ட பேதங்கள்
பாட்டுக்கு நூறாய்ப் பரந்து விரிந்தனவாம்;
நாட்டுக்குள் கம்பன் நயந்து வருவானேல்
பாட்டுள் கிளைத்தெழுந்த பாடத்தைத் தன்செவியாற்
கேட்டுக் களிப்பானோ? கேளாமல் வெம்பிடுவான்;
ஆய்ந்துரைத்த தன்பாவில் யார்யாரோ கைவைத்துத்
தோய்ந்துரைத்த பாடமிது தூயதிது வென்றே
திருத்தங்கள் செய்வதையும் சிற்சிலபா கம்பன்
விருத்தங்கள் அல்லவென வெட்டிக் கழிப்பதையும்
கம்பனவன் வந்திங்குக் காண்பானேல் “இவ்வண்ணம்
வம்புகள் செய்வதற்கு வாய்த்த முறையென்ன?
இன்றெனது பாட்டில் இவர்க்கோர் உரிமையுண்டா?”
என்றியம்பி நெஞ்சம் இனைந்தன்றோ வெம்புவான்;
பாட்டுலகைக் காணப் பரிவோடு கம்பனிந்த
நாட்டகத்தே வந்தால் நலிவெய்திப் போகானோ?
பாடும் மரபறியார் பாட்டின் திறமுணரார்
கூடும் இலக்கணத்தைக் கொல்லும் வகைதெரிவார்
பாவென்ற பேராலே பாடித் தொகுத்தெடுத்து
நாவொன்று கொண்டு நவில்கின்றார்; அன்னவர்தாம்
நாட்டிற் கவிஞரென நல்லதொரு பேர்தாங்கி
ஏட்டில் எழுதியதும் ஏறுநடை போடுகின்றார்;
குற்றஞ் செறிந்தகவி கொட்டித் திரிபவரைச்
செற்றமிகக் கொண்டு செவியை அறுப்பதற்குங்
குட்டுதற்கும் வெட்டுதற்கும் கூறும் அவர்சொல்லைத்