தட்டுதற்கும் ஆளில்லை என்ற தருக்காலோ பாட்டுலகைப் பாழ்படுத்திப் பாடித் திரிகின்றார்? கேட்டைக் களையக் கிளர்ந்தெழுவார் இல்லைஎனில் பாட்டுந் தமிழும் பரவும் இலக்கியமுங் கேட்டுக் கிலக்காகிக் கீழ்நிலையிற் போய்வீழும்; வீழுநிலை வந்து விடுமோ எனமயங்கிச் சூழும் புகழ்க்கம்பன் துன்பத்தால் வெம்பிடுவான்; அண்டை மொழிகள் அருமைத் தமிழ்மொழிக்குள் ஒண்டஇடம் தந்தால் ஒலிக்கும் மரபறிந்து சொல்லும் முறைதெரிந்து சொல்லினான் நம்கம்பன்; புல்லுங் கவிபுனைவோர் புக்கமொழிச் சொல்லைஎலாம் அள்ளிச் செருகி அயன்மொழியின் ஓசைதனைச் சொல்லிக் கதைக்கின்றார் சொன்னாற் புரிவதிலை; செம்மொழியாம் நம்மொழிக்குச் சேயாய்ப் பிறந்திருந்தும் எம்மொழிதான் வந்தாலும் ஏத்தித் துதிக்கின்ற பேதை மனத்தவராய்ப் பேரால் தமிழரென்பார் தீது வரும்நிலையில் செந்தமிழைக் கண்டாலும் ஏதும் அறியா திருக்கின்றார் பேரளவில்; ஓதுந் தமிழின் உயர்வொன்றும் எண்ணுகிலார்; தாய்மொழிக்குத் தன்னுரிமை தாராத வன்கொடுமைப் பேய்நிலையைக் கண்டபினும் பேசா திருக்கின்றார்; இத்தகுநன் மாந்தர்தமை எம்கம்பன் காணுங்கால் “பித்தரெனத் தக்கவரைப் பிள்ளைஎனப் பெற்றாளே! நன்றறிவு காண்கின்ற நாளிவர்க்கு வாராதோ?” என்றெல்லாம் எண்ணி இரங்கிமனம் வெம்பிடுவான்; எல்லா வுயிர்க்கும் பிறப்பொக்கும் என்றுணர்ந்தும் அல்லா நெறிசென்றோம் அப்பிறப்பில் தாழ்வுயர்வும் செல்வம் பதவியெனச் செப்பும் அவற்றுள்ளும் பல்வகைய வேற்றுமை பண்ணிப் பிளந்தோம் |