சீர்கொண்ட நம்நாடு செம்மை திறம்பாது; நாற்றிசையும் ஓங்கியுயர் நாடெல்லாம் இந்நாட்டுக் கோற்றொடியார் சென்றங்குக்கூடும் புதுமைகளைக் கொண்டுவந் தின்பங் கொழிக்கச் செயவேண்டும்; மண்டும் புகழ்நூல்கள் வாழ்வில் உறுநுட்பம் கற்றுத் தெளிந்துணர்ந்து கட்டுக் கதைதகர்த்துச் சுற்றுந் துயர்துடைக்கச் சொல்லும் புதுமைப்பெண் நாட்டுக்கு வேண்டு, மென நல்ல சுவைகூட்டும் பாட்டுக்கு வேந்தனெனும் பாரதி சொல்லிவைத்தான்; ‘பூவுலகோர் நம்நாட்டைப் போற்றிப் புகழவெனில் பாவையர்கள் முன்னேற்றப் பாதைதனிற் சென்றிடுக’ என்னுங் கருத்தை எடுத்துரைத்தான்; அன்னவரும் முன்னம் இருந்தகொடும் மூடப் பழக்கத்தைக் கல்லிக் கடிந்தெறிந்து கல்வித் துறைமுதலாச் சொல்லும் நெறியெல்லாந் தோன்றுகின்றார் முன்னேறி; வாழ்விற் சரிபங்கு வாய்ப்பும் பெறுகின்றார்; தாழ்வுறுதல் இல்லையவர் தாம். திருச்சி வானொலி நிலையம் 14.1.1965 |