182 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
அறுசுவையாம் உணவனைத்தும் ஆக்கி வைப்பர் அலுவலுக்குச் சென்றயர்ந்த கொழுநன் மீண்டு வருநெறியில் விழிவைத்துக் காத்து நிற்பர்; வளர்கல்விப் பள்ளிக்குச் சென்ற பிள்ளை குறுகுறுவென் றோடிவரும் திசையை நோக்கிக் கூடத்தில் அமர்ந்திருப்பர்; இல்ல றத்தின் உறுபயனை வருவிருந்தைப் பார்த்தி ருப்பர் ஒருபோதும் தந்நலமே கருதாப் பெண்டிர் கண்ணுக்குப் புலனாகும் அமைதி யைத்தான் கற்றவர்கள் பெண்மைஎனக் கழறி நின்றார்; மண்ணுக்குப் பொறையுடைமை உரிமை என்றால் மங்கையர்க்குப் பிறகன்றோ அதற்குச் சேரும்; எண்ணுக்குள் அடங்காத இன்ன லுற்றும் எள்ளளவும் தளராமல் உலகைக் காக்கும் பெண்ணுக்கு நிகராக ஒன்றுண் டோ? அப் பிறப்பெடுக்க மாதவந்தான் வேண்டு மம்மா! முன்பிருந்த தமிழ்மாந்தர் பெண்ணி னத்தின் முதன்மைக்கு மதிப்பளித்துப் போற்றி வந்தார்; அன்பிருந்த காரணத்தால் ஆண்மை பெண்மை அவ்விரண்டும் சமமென்று நினைந்து வாழ்ந்தார்; நன்குணர்ந்த அவ்வைமுதல் மகளிர் தம்மை நாட்டிலுயர் அரசரெலாம் மதித்து வாழ்ந்தார்; பின்பிறந்தார் எப்படியோ பேத லித்தார் பெண்ணினத்தை வேதனைக்குள் வீழ்த்தி விட்டார். |