பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்183

கற்புக்கும் பண்புக்கும் இல்ல றத்தின்
      காப்புக்கும் கண்ணகித்தாய் சான்றாய் நின்றாள்;
பொற்புக்கும் நற்கலைக்கும் தன்ன லத்தைப்
      போக்குதற்கும் மாதவித்தாய் சான்றாய் நின்றாள்;
*அற்புக்கும் அருளுக்கும் ஆசை எல்லாம்
      அடியோடு துறந்ததற்கும் சான்றாய் இங்கு
நிற்றற்கு மேகலைபோல் யாரே உள்ளார்?
      நேரிழையார் பெருமைசொல இவரே போதும்,

அன்னையொடு தந்தையையும் தெய்வ மென்றார்;
      ஆண்டவனை விளித்தவரோ அம்மே அப்பா
என்னவொரு பாவுரைத்தார்; சத்தி யாகிச்
      சிவமாகி என்றவொரு பாட்டும் உண்டு;
முன்னையவர் மொழிந்தவற்றை உற்று நோக்கின்
      முதலிடத்தைப் பெண்மைக்கே அளித்தி ருந்தும்
பின்னையவர் ஏன்மறுத்தார்? பெண்மைக் கேனோ
      பிழைபுரிந்தார்? பிறபண்பின் நுழைவோ? யாதோ?

கல்விதனைக் கலைமகளென் றுரைத்து வைத்தார்;
      கடலுலகை நிலமகளென் றழைத்து வந்தார்;
பல்வகைய செல்வத்தை மலரில் ஏற்றிப்
      பணிந்த**திரு மகளெண்மர் என்றார்; நாளும்
சொல்விளையும் தமிழ்மொழியைத் தாயே என்றார்;
      துணைசெய்யும் நன்மைஎலாம் நல்லார் என்றார்;
***எல்வளையர்க் கிவ்வண்ணம் மேன்மை தந்தும்
      எப்படியோ பின்னாளிற் கீழ்மை தந்தார்,


*அற்பு - அன்பு **திருமகள் எண்மர் - அட்ட இலக்குமி
***எல்வளையர் -ஒலி பொருந்திய வளையலணிந்த பெண்டிர்,