பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்199

2
தமிழ்த் தொண்டு

தமிழ்ப்புலவர் அரசியலில் வல்லா ருண்டா?
      தகுதிமிகு செய்தித்தாள் நடத்த லுண்டா?
தமிழ்ப்புலவர் தொழிலாளர் இயக்கங் கண்டு
      தலைமைபெறும் நிலையுண்டா? சிறையிற் பட்ட
தமிழ்ப்புலவர் முன்புண்டா? சமய வாதி
      தன்கருத்தைப் பெரியார்முன் மொழிந்த துண்டா?
தமிழ்ப்புலவர் பொதுமைநெறி புதுமைப் போக்குச்
      சார்ந்ததுண்டா? திரு.வி.க. ஒருவர் உண்டு.

பன்மொழிகள் கற்றதனால் பான்மை கெட்டுப்
      பைந்தமிழ்க்கோர் ஊறுசெய நினையா நெஞ்சர்;
தென்மொழியும் வடமொழியும் கரைகள் கண்டார்;
      தீந்தமிழைச் செந்தமிழை உயிராக் கொண்டார்;
நன்மைதரும் உரைவல்லார்; சங்க நூலின்
      நயம்பொழியும் நாவல்லார்; பூங்குன் றத்து
நன்மகனைப் பண்டிதமா மணியை நெஞ்சால்
      நாடிடுவோர் தமிழ்மொழிக்குத் தீங்கு செய்யார்.

நாவாழும் தமிழ்மொழிக்கே வாழ்வு வேண்டி
      நயத்தக்க ஆய்வுரைகள் எழுதிக் காட்டித்
தீவாழும் நெஞ்சுடைய ஆரி யத்தின்
      திரிபுரையைப் பகுத்தறிவால் மறுத்துக் காட்டிக்
கோவாக நம்முன்னே வீற்றி ருக்கும்
      கொடுமீசை சிவந்தவிழி கருத்தமேனிப்
பாவாணர் படைத்தளித்த எழுத்த னைத்தும்
      பசுந்தமிழுக் காணிவேர் ஆகி நிற்கும்.