பக்கம் எண் :

202கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

4
எழுத்து மலை

தொழுத்தகுநற் றமிழ்மொழியும் அதனோ டொத்த
      தொன்மைமிகும் ஆரியமும் கற்றுத் தேர்ந்து
பழுத்தமலை; பண்புவளர் ஆங்கி லம்போற்
      பலமொழிகள் பயின்றமலை; சான்றோர்நெஞ்சம்
வழுத்துமலை; வளர்ந்துயர்ந்த எழுத்து வல்லார்
      வற்றாத அருவியெனத் தோன்றச் செய்த
எழுத்துமலைப் பெருமையெலாம் விண்டு ரைத்தல்
      எளியதொரு செயலாமோ? அரிய தன்றோ?

அளக்கஒரு கருவியிலா அளவு கொண்டான்;
      அலகில்பல பொருள்கொண்டான்; பகைவர் யாரும்
துளக்கரிய நிலைகொண்டான்; புகழால் ஓங்கித்
      தொலைவிலுளார் அறியவளர் தோற்றங் கொண்டான்;
உளத்துறுநம் தமிழ்நினைவு வறந்த போதும்
      உலகினர்க்கு வளந்தருதல் வண்மை கொண்டான்;
வளத்திலுயர் அம்மலையை மறைப்பான் வேண்டி
      வஞ்சனையார் முயல்வரெனின் மதிதான் என்னே!

நாடகநூல், பாவகைநூல், ஆய்ந்து ரைத்த
      நலமிகுநூல், அறிவியல்நூல், நுழைபு லத்தார்
நாடறிவு, நூல்பலவோ டுரைநூல், நெஞ்சம்
      நயக்கின்ற நெடுங்கதைநூல் இன்னோரன்ன
பீடணையும் பெருநூல்கள் எழுதித் தந்த
      பெருமலையாம் மறைமலையின் எழுத்து வன்மை
நாடறியும் வீடறியும் நல்லோர் நெஞ்சம்
      நன்கறியும்; அறியாதார் அறியா தாரே.