பக்கம் எண் :

208கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

7
பழமை வேண்டான்!

பாண்டியனை நினைப்பூட்டும் பார்வையாளன்
      பாழான பழமை வேண்டான்!
மாண்டநல்ல சங்கத்தார் தமைப்போல்வான்
      மனத்தில்எழும் புதுக்க ருத்தை
வேண்டியமட் டுங்கொடுப்பான்! வீரத்தை
      ஊட்டிடுவான்; ஊழிக் காலம்
தாண்டியநல் தமிழ்மொழியால்! மீசையின்மேல்
      தணியாத காதல் கொண்டான்!

இனிஅஞ்சார் தமிழ்மக்கள்; தமிழுக்கோர்
      இடுக்கண்இனி வருதல் இல்லை!
கனிமொழியில், காதலைத்தான் பகுத்தறிவுக்
      கதிரைத்தான் காட்டி விட்டார்!
நனிமகிழ்ந்து தமிழரெலாம் போற்றுகிறார்
      நம்மினத்தார் விளங்கப் பாண்டி
இனிதளித்த பரிசிலவன் எதிர்ப்பஞ்சா
      இயற்கவிஞன் ஏறு போல்வான்!

கடவுளரைப் பாடிமகிழ்ந்த ததன்பிறகு
      காலத்தை எதிர்த்து நின்று,
மடமையினை மாய்த்திட்டான் பாரதியின்
      தாசனென மதிப்பும் பெற்றான்!
திடமுடனே அவன்கருத்தைச் செப்புகிறான்;
      தீந்தமிழின் உரிமை காக்க
உடல்கொடுப்பேன் என்கின்றான்! அவனளிக்கும்
      ஓவியங்கள் வாழ்க நன்றே!