பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்211

பொறியியலில் வல்லவரை, வானில் நீரில்
      போர்புரியும் படைஞர்தமை, அறிவு நல்கி
நெறியியக்கும் பல்வகைய ஆசான் மாரை,
      நெஞ்சிரங்கும் மருத்துவரைப் புலவர் தம்மைப்
பெரியவனே எம்மிடையில் தோற்று வித்தாய்!
      பிள்ளையென எம்மையெலாம் வளர்த்து வந்தாய்!
வறுமையிருட் படுகுழியில் கிடந்த எம்மை
      வாழ்விக்க வரும்தலைவா! வணங்கு கின்றோம்.

காந்திநகர் மக்களுக்கு வாழ்வு நல்கக்
      கல்விவளர் கழகமென ஒன்று கண்டாய்;
ஈந்துபொருள், ஒளிநல்கி, நூல்கள் நல்கி,
      எமக்கெனஓர் ஆசானும்நல்கி, என்றும்
போந்திங்கு மேற்பார்வை இடையீ டின்றிப்
      புரிந்துவரும் ஆசிரியப் பெரியோய்! நாங்கள்
காந்தியென நின்னைத்தான் காணு கின்றோம்
      கருணைமனம் வாழ்கவென வாழ்த்து கின்றோம்.

(அண்ணல் சுப்பிரமணியனார்க்குப் புதுக்கோட்டைக் காந்திநகர் மக்கள் 17.10.1970-இல் நடத்திய பாராட்டு விழாவில் அம்மக்கள் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்)