பக்கம் எண் :

218கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

12
தமிழ்க் கடல்

பச்சைமா மலைமுகட்டில் ஆழ்வார் பெய்த
      பாடல்நா லாயிரமும் செந்தேன் ஆறு;
மச்சவுரு மாலவனும் அயனும் அண்ணா
      மலைவாழும் சிவமலையில் மூவர் பெய்த
மெச்சுமிசைத் தேவாரம் தீம்பா லாறு;
      மேலவர்வாழ் குன்றத்தூர்ப் பெருமான் பெய்த
இச்சைமிகும் திருதொண்டர் பெருமை பேசும்
      எழில்மிகுந்த வரலாறும் ஒருபே ராறு.

அவனடியைத் தொழுதுருகும் வாச கந்தான்
      அழுதழுது பொழிந்துவைத்த கண்ணீர் ஆறாம்;
எவனடியால் உலகளந்தான் அவன்றன் காதை
      இயம்பும்நூல் உயிராறாம்; பயில்வார் நெஞ்சைக்
கவருமுலா தூதுபிள்ளைத் தமிழோ டின்னும்
      கலம்பகங்கள் சிற்றாறாம்; இவ்வா றெல்லாம்
தவறாது மனம்புகுந்து பொங்கி யோங்கும்
      தமிழ்க்கடலே நம்இராய சொக்க லிங்கம்.

16.9.1973