மனிதரைக் கண்டு கொண்டேன் | 225 |
17 நட்பிற் பெரியன் தைக்கின்ற ஊசிதனில் கூர்மை யுண்டு தமிழண்ணல் நுழைபுலத்தும் அதனைக் கண்டேன்; மொய்க்கின்ற அலைகடலில் ஆழம் உண்டு முன்னவன்றன் கல்வியிலும் அதனைக் கண்டேன்; மெய்க்கின்ற முகில்வானில் அகலம் உண்டு மேலவன்றன் புலமையிலும் அதனைக் கண்டேன்; மைக்குன்ற வரைத்தேனில் இனிமை யுண்டு மனத்துவளர் நட்பினிலும் அதனைக் கண்டேன். உடனுறையுங் காலத்தே எனது நெஞ்சில் ஊறிவரும் பாடலுக்குச் செவிலி யானான்; இடனறவே மனக்கவலை கவ்வும் வேளை இனிய சொலித்தேற்றுகின்ற துணைவன் ஆனான்; கடனறியும் உளப்பாங்கால் உண்மை யன்பு காட்டுகிற மனப்போக்கால் இளவல் ஆனான்; அடவிரைவில் பேராசான் ஆகி என்னை அப்படியே விட்டுவிட்டு மதுரை போனான். அவன்நெஞ்சை நானறிவேன் எனது நெஞ்சை அவனறிவான்; ஒருவருக்குள் ஒருவ ராகி இவரிரட்டைப் புலவரென உரைக்கும் வண்ணம் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் உலவி வந்தோம்; அவன்தொழிலால் மதுரைக்குப் பிரிந்து சென்றான் ஆயினும்எம் உள்ளங்கள் பிரியவில்லை அவனுறவை இரட்டித்த முப்பத் தாண்டின் அகவையிலும் நினைந்துநினைந் திளைஞன் ஆனேன். |