பக்கம் எண் :

226கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

முதற்படியில் நின்றிருந்தான் அன்றி ருந்தே
      முகம்மலர அகம்மலரப் பழகி வந்தான்;
முதற்படியில் நின்றபடி முயற்சி தன்னால்
      முன்னேற்றப் படியேறி உயர்ந்து வந்தான்;
இதற்கிடையில் பலபடிகள் கடந்தும், முன்னர்
      இருந்தபடி யிருக்கின்றான் நட்பில் இன்றும்;
*மதர்ப்படியில் உருப்படியும் செருக்கு மட்டும்
      மனத்தடியில் சாகுபடி யாக வில்லை.

மனத்துக்குள் செருக்கில்லான் எனினும் சான்றோர்
      மதிக்கின்ற பெருமிதத்திற் குன்றமாட்டான்;
முனைப்புற்ற எவரிடத்தும் பணிய மாட்டான்
      முன்னேற்றம் தடைப்படினும் வளைய மாட்டான்;
எனக்குற்ற இளவலென விளங்கி நிற்பான்;
      எனினுமவன் அடிப்பொடியன் நட்பில் மட்டும்;
புனத்துக்குள் உலவிவரும் கவரி மான்போல்
      பூமனத்தன் வாழ்கின்றான் வாழ்க நன்றே.

உருவத்தாற் சிறியவன்றான் எனினும் நல்ல
      உள்ளத்தால் உயர்மதியால் பெரியன் ஆவன்;
பருவத்தால் முதிர்ந்துவரும் புலமை கொண்டான்
      பாதியிலே உதிர்ந்துவிழும் வெம்பல் இல்லை;
உருவத்தில் மெலியவன்றான் எனினும் கல்வி
      ஊற்றத்தால் புலமையினால் வலிமை மிக்கான்;
எருவைத்தாற் பயிர்வளரும்; புலமை வைத்தான்
      இவனிடத்தே தமிழ்வளரும் செழித்து நன்றே;


* மதர்ப்படியில் உருப்படியும் - மதர்ப்பின் அடியில் உருவாகும்.

30.1.1980