பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்241

மிகத்துணிந்த பசும்பொன்னார் மேலொருநாள்
      நமைத்தாக்க மேடை ஏறி
அகத்தெழுந்த பக்தியினால் ஆண்டவன்பால்
      ஆசையினால் ஆர்த்தெ ழுந்து
பகுத்தறிவால் ஒருமுட்டை படைத்திடவும்
      ஆமொஎன் றுருத்துக் கேட்க
நகைச்சுவையில் நம்மழகன் நறுக்கென்று
      விடை தந்தான் நாணும் வண்ணம்.

பக்தியுளார் முட்டையிட்ட பாடத்தைப்
      படித்ததிலை பாரில் கோழி
கத்திவந்த முட்டையிடும் கண்டுள்ளோம்
      கனன்றுரைத்து பசும்பொன் னார்தாம்
பக்தியினால் முட்டையொன்று படைப்பாரா?
      படைக்கட்டும் பார்ப்போம் என்ற
அத்துணிவைக் கண்டவையோர் அடடாவோ
      அடடாவென் றார்த்து நின்றார்.

விளக்கெண்ணெய்ப் பேச்சறியான் விறுவிறுப்பும்
      சுறுசுறுப்பும் விரைந்து நெஞ்சில்
கொளப்பண்ணும் பேச்சாளன் கொள்கைகளைத்
      தெளிவாக கோத்தெ டுத்து
விளக்குவதில், இலக்கியத்து விரிவுரையில்,
      நகைச்சுவைகள் விளைக்கும் பேச்சில்,
துளைக்கின்ற மறுப்புரையில் தோலாத
      நாவுடைய தோழன் ஆவன்.