மனிதரைக் கண்டு கொண்டேன் | 247 |
கோடையிலே சிரித்தமலர் மணத்தை வாரிக் கொண்டுசெலும் பொதிகைமலைத் தென்றல்; நீயோ மேடையிலே சிரித்தவர்தம் பணத்தை வாரி மெதுவாகக் கொண்டுசெலும் ஆருர்த் தென்றல். செங்கதிரோன் சிரித்துவிடின் புழுக்கந் தோன்றும் சிறியபனை விசிறிகளின் துணையை நாடும்; செங்கதிரின் வெயில்காயத் தானே வந்து சிறியபுழு வீழ்ந்துடலம் சுருண்டு சாகும்; பொங்கிவரும் நின்சிரிப்பால் பகைவர் நெஞ்சம் புழுக்கமுறும் விசிறிகளின் துணையை நாடும்; எங்களுளங் கவர்ந்தவனே பகைப்பு ழுக்கள் இடந்தெரிய மாட்டாமல் வீழ்ந்து சாகும். திகழ்ந்துவரும் வெண்ணிலவு சிரித்தால் ஒன்று சேர்ந்திருக்கும் காதலர்க்குக் களிப்பை யூட்டும்; மகிழ்ந்திருந்து பிரிந்தவர்க்கோ எரிச்சல் ஊட்டும்; மதியினையே திட்டுகிற மருட்சி யூட்டும்; முகிழ்த்துவரும் நின்சிரிப்போ நின்னைச் சேர்ந்த முன்னேற்றக் கருத்தினர்க்கு மகிழ்ச்சி யூட்டும்; இகழ்ந்துன்னைப் பிரிந்தவர்க்கோ எரிச்ச லூட்டும்; ஏதேதோ திட்டுகிற மருட்சி யூட்டும். உயர்வுக்கு வானத்தை உவமை சொல்வர்; உழைத்துவரும் உயர்வுக்கு வானம் நீதான் மயிலுக்கு வான்சிரித்தால் தோகை ஆடும் மாந்தருக்கு நீசிரித்தால் ஓகை கூடும்; பயமுறுத்தி இடியிடிக்கும் மின்னல் வீசும் பார்மகிழ மழைபொழியும் வான்சி ரித்தால்; துயருறுத்த வருபகையை இடித்து மின்னிச் சொல்மாரி நனிபொழியும் நீசி ரித்தால். |