பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்249

முதல்வர்கரு ணாநிதிஎன் றுணர்த்து கின்ற
      முத்திரைதான் அவ்வெழுத்து; மெய்யெ ழுத்தின்
முதலெழுத்தும் நீதானே; உயிராம் அண்ணா
      முதலெழுத்தும் உன்னுடன்தான் இணைந்தி ருக்கும்.

பிணியுற்ற தமிழினத்தைப் பிழைக்க வைக்கப்
      பெரியாராம் மருத்துவரோ அறுவை செய்தார்;
தணியட்டும் பிணியென்று மருந்தை அண்ணா
      தந்திரமாக் கூட்டுக்குள் அடைத்துத் தந்தார்;
துணிவுற்ற திருமணத்தோய்! நீயோ அந்தத்
      தொழிலுடனே வலிக்காமல் ஊசி போடும்
பணிகற்றாய்; பெயர்பெற்றாய், சித்தர் சொன்ன
      பச்சிலையும் மூலிகையும் கற்றுக் கொண்டாய்.

மருத்துவனே பிணியகன்ற மாந்தர் நின்றன்
      மருத்துவத்தின் திறங்கண்டு மகிழ்வு கொண்டு
வருத்தமற வாய்விட்டுச் சிரித்தார்; நீயும்
      வளர்தமிழ்ச்சொல் வருவாயால் சிரித்து நின்றாய்;
சிறுத்தமதி படைத்தவரோ அதனைக் கண்டு
      சிந்தைஎலாம் அழுக்காறு வளர்த்து நின்றார்;
திருத்தமுற மருத்துவத்தைக் கல்லார் இங்குத்
      திரிகின்றார் மருத்துவர்போல் எனச்சி ரித்தாய்;

முடியரசன் எனும்பெயரைப் பூண்டி ருந்தும்
      முடியிழந்து நிற்கின்றேன்; நீயும் இன்று
முடியிழந்து நிற்கின்றாய்; ஆனால் என்போல்
      முடி ஒன்றும் நரைக்கவில்லை; யாண்டுப் பெற்றாய்?
இடியனைய துயர்வந்து தாக்கும் போதும்
      இடியாமல் சிரிப்பதனால் பெற்றாய் போலும்!
முடியிழந்து நின்றாலும் மன்னா நின்றன்
      முகத்தழகு சிரித்துவிளை யாடக் கண்டேன்.