மனிதரைக் கண்டு கொண்டேன் | 251 |
அவன்சிரித்தான் முப்புரத்தைச் சுட்டெ ரித்தான்; ஆற்றலுளாய்! நீசிரித்தாய் நம்மை யண்டித் தவறுசெயும் முப்புரியைச் சுட்டெரித்தாய்; தனிமதியாய்! எமதுதென்னா டுடையாய் போற்றி. பொங்கிஎழும் அலைக்கைகள் எடுத்துச் சென்ற புகார்கண்டு சிரித்தவன் நீ; படைத்த சிற்பி பொங்கிவரும் மனக்களிப்பால் நின்னை நோக்கிப் பூம்புகார்ப் பெருந்தச்சன் என்று சொன்னார்; இங்கவர்தாம் உளியொன்றும் தந்தா ரல்லர்; ஆதலினால் மற்றொருவர் உளியை நின்பால் தங்குதடை யில்லாமல் வீசப் பெற்றுத் தமிழகத்தை உருவாக்கும் சிற்பி யானாய். ‘பேருலகில் நீசிரித்து வாழ வேண்டும் பிறர்சிரிக்க வாழாதே’ என்று சொல்லி, ஆரொருவர் சிரித்தாலும் அவர்சி ரிப்பை அழித்துவிட்டுத் தாம்மட்டும் சிரித்து நிற்பார்; சீருடையாய்! நின்னுடனே பிறரும் சேர்ந்து சிரிப்பதற்கே வாழ்வெடுத்தாய்; எளியர் தாமும் சீரடைய வாழ்வுபெறச் சிரித்து வாழச் சிரிக்கின்றாய் வாழ்கின்றாய் வாழ்த்து கின்றேன். மெருகூட்டும் முகங்கொண்டார் மக்கள் மன்றில் மெய்யோபோல் குண்டுவிடும் இயல்புங் கொண்டார் திருநாட்டின் மேல்மன்றில் எம்டன் குண்டைத் தெரியாமல் போட்டாலும் சிரிக்கின் றாய்நீ; கருவாட்டுக் கடைதிறக்கச் சென்ற போதும் கருவென்ப துன்பெயரை நினைவில் கூட்டத் திருநாக்கில் நரம்பின்றி நின்னைத் திட்டிச் ‘சிறைவைப்பேன்’ என்றாலும் சிரிக்கின் றாய்நீ. |