பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்251

அவன்சிரித்தான் முப்புரத்தைச் சுட்டெ ரித்தான்;
      ஆற்றலுளாய்! நீசிரித்தாய் நம்மை யண்டித்
தவறுசெயும் முப்புரியைச் சுட்டெரித்தாய்;
      தனிமதியாய்! எமதுதென்னா டுடையாய் போற்றி.

பொங்கிஎழும் அலைக்கைகள் எடுத்துச் சென்ற
      புகார்கண்டு சிரித்தவன் நீ; படைத்த சிற்பி
பொங்கிவரும் மனக்களிப்பால் நின்னை நோக்கிப்
      பூம்புகார்ப் பெருந்தச்சன் என்று சொன்னார்;
இங்கவர்தாம் உளியொன்றும் தந்தா ரல்லர்;
      ஆதலினால் மற்றொருவர் உளியை நின்பால்
தங்குதடை யில்லாமல் வீசப் பெற்றுத்
      தமிழகத்தை உருவாக்கும் சிற்பி யானாய்.

‘பேருலகில் நீசிரித்து வாழ வேண்டும்
      பிறர்சிரிக்க வாழாதே’ என்று சொல்லி,
ஆரொருவர் சிரித்தாலும் அவர்சி ரிப்பை
      அழித்துவிட்டுத் தாம்மட்டும் சிரித்து நிற்பார்;
சீருடையாய்! நின்னுடனே பிறரும் சேர்ந்து
      சிரிப்பதற்கே வாழ்வெடுத்தாய்; எளியர் தாமும்
சீரடைய வாழ்வுபெறச் சிரித்து வாழச்
      சிரிக்கின்றாய் வாழ்கின்றாய் வாழ்த்து கின்றேன்.

மெருகூட்டும் முகங்கொண்டார் மக்கள் மன்றில்
      மெய்யோபோல் குண்டுவிடும் இயல்புங் கொண்டார்
திருநாட்டின் மேல்மன்றில் எம்டன் குண்டைத்
      தெரியாமல் போட்டாலும் சிரிக்கின் றாய்நீ;
கருவாட்டுக் கடைதிறக்கச் சென்ற போதும்
      கருவென்ப துன்பெயரை நினைவில் கூட்டத்
திருநாக்கில் நரம்பின்றி நின்னைத் திட்டிச்
      ‘சிறைவைப்பேன்’ என்றாலும் சிரிக்கின் றாய்நீ.