பக்கம் எண் :

256கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

நடுவுநிலை பிறழாதான் நாட்டுநலங்
      கருதிடுவான் நன்றே செய்வான்
தொடுவானச் செங்கதிராய்த் தோன்றிடுவான்
      சுடரொளியைத் தொழுவோம் வாரீர்.

முன்னையெலாம் வடவருக்கு முன்னின்று
      கைகட்டி முடங்கி நிற்போம்
பின்னைஅது மாறியது; பேரன்பு
      கொண்டுநமைப் பேணி வந்து
கன்னல்மொழி பேசுகின்றார் கைகொடுக்க
      வருகின்றார் வடபு லத்தார்;
இன்னநிலை வந்ததுதான் எப்படியோ?
      இக்கலைஞன் ஆற்றலன்றோ!

ஆற்றலுக்குத் தலைமகனை அஞ்சாத
      அரியேற்றை ஆண வத்தார்
தூற்றலுக்குத் துவளானைத் தொண்டர்க்குத்
      துணையானைத் தொடுத்த போரில்
மாற்றலரை அஞ்சானை மதிமிகுத்த
      திறலானை மானங் காக்க
ஆற்றிவரும் பணியானை அன்னைமனங்
      கொண்டவனை வாழ்த்த வாரீர்.

(மீண்டுங் கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது பாடியது).

24.1.1989