பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்259

தலையிலொரு முழத்துணியைச் சுற்றிக் கட்டித்
      தனதிடையில் சிறுகந்தல் இறுகச் சுற்றி
உலையிலெழுங் காற்றெனவே மூச்சு வாங்க
      உடல்பருத்த மாந்தரையும் ஏற்றி வைத்துத்
தலையிருந்து கால்வரையும் வியர்வை சிந்தி
      தனிமனிதன் வண்டியினை இழுத்துச் செல்லும்
நிலையினியும் ஏனென்றால், படைப்போன் இந்த
      நிலைஎழுதி விட்டானென் றுரைக்கக் கேட்டோம்.

விதியென்று சொல்வதெலாம் சோம்பி நிற்பார்
      வீண்பேச்சு; படைத்தவற்குப் பழியும் ஆகும்;
மதிகொண்டு சிந்தித்துத் துயரம் தீர்க்க
      மாற்றொன்று காண்பதுதான் ஆள்வோர் செய்கை;
அதுவின்றேல் அரிய ணைஏன்? தாழ்வு பெற்ற
      அவர்தமக்குங் கைகொடுப்போம் என்று ணர்ந்து
மிதிவண்டி நல்கிஅவர் துயர்கு றைத்து
      மீட்சிதரத் துணைநிற்கும் அரசு கண்டோம்.

அங்கமெலாங் குறைந்தழுகி முகம்வ தங்கி
      அழகழிந்து புறங்கூனி நடைத ளர்ந்து
தங்கஒரு நிலையின்றித் தண்டு மின்றிப்
      தள்ளாடிச் சோற்றுக்கு வழியு மின்றிப்
பொங்கிவரும் வேதனையை அழுது தீர்த்துப்
      புழுவினுங்கீழ் நிலையினராய் இரந்து வாழும்
தொங்குமுடற் றொழுநோயர் வாழ்வை எண்ணத்
      தொடங்கியவர் எவருள்ளார் காந்தி யன்றி?