பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்261

வேரடியிற் பழுத்தபலா கேட்பா ரற்று
      வீணாதல் கண்டெழுந்து, மூடக் கொள்கை
வேரடியைப் பெயர்த்துவிட்டார் பெரியார்; அந்த
      வீரத்தின் அடிச்சுவட்டில் நடந்து செல்லும்
சீருடைய நமதரசு துணிந்து, கண்ணீர்ச்
      சிற்பங்கள் சிரித்திருக்க, வயது சென்றோர்
யாருடைய துணையுமின்றி வாழ்ந்தி ருக்க
      ஈடில்லா மறுமலர்ச்சி வழங்கக் கண்டோம்.

‘வறியவர்தம் புன்னகையில் இறைவன் உள்ளான்
      வாழவழி ஏழையர்க்குக் காண்போம்’ என்ற
அறிஞரவர் அண்ணாவின் இதயப் பாங்கை
      அப்படியே நமதரசு பெற்ற தாலே
சிறியஇளங் குஞ்சுகளைப் பெற்றோ ரின்றிச்
      சீரிழந்த குழந்தைகளைப் பேணிக் காக்கச்
செறிவுடைய நெறியமைத்து வாழ்நாள் எல்லாம்
      சிரித்திருக்க அமைந்ததுகாண் கருணை இல்லம்.

இலைநமக்கு வழிஏதும் என்று வாடி,
      எல்லாமே தலையெழுத்தென் றுரைத்து, வாழ்வின்
நிலையிழந்து கீழ்த்தளத்தில் உழல்வோர் எல்லாம்
      நிமிர்ந்தெழுந்து நடந்துலகை விழித்து நோக்கும்
கலையிதனைக் கலைஞரலால் எவரே செய்வர்?
      கடுகளவும் நன்றியுளார் ஒப்புக் கொள்வர்;
தலையெழுத்தை அழித்தெழுதுங் கையெ ழுத்தைத்
      தமிழரசைப் பல்லாண்டு வாழ்க என்போம்.