பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே31

11
பெற்றவர் தூங்கினால்.......?

கற்று வரச்சொல்லிப் போக்கினீர்- மக்கள்
      கற்றன ராவெனப் பார்க்கிலீர்
குற்றம் இழைத்திட நாடுவார்- கல்விக்
      கூடங்கள் தாக்கிடக் கூடுவார்
செற்றமு டன்கலாம் செய்யவோ?- அங்குச்
      சென்றனர் பிள்ளைகள் ஐயவோ!
பெற்றவர் இப்படித் தூங்கினால்- நாளை
      பின்விளை வென்னென்ன வாகுமோ?

மங்கையர் ஏகிடக் கூசுவார்-கற்கும்
      மாணவர் அப்படிப் பேசுவார்
எங்கணும் தேர்வுகள் காணுவோர்- நெஞ்சில்
      ஏக்கம் மிகுந்திட நாணுவார்
தங்கும் இடங்களில் போர்க்களம்- ஊர்தி
      சார்ந்திடும் போதிலும் போர்க்களம்
இங்கிவர் இப்படி ஏகினால்- நாளை
      எப்படி எப்படி யாகுமோ?

கண்டனம் இன்மையால் நேர்ந்ததோ -கல்விக்
      கட்டணம் இன்மையால் சார்ந்ததோ?
சண்டை இடுங்கட்சி புக்கதோ- அன்றித்
      தானெனும் ஆணவம் மிக்கதோ?
கண்டுளம் வேதனை கொள்கிறேன்- இந்தக்
      காளையர் வாழ்ந்திடச் சொல்கிறேன்
மண்டிய தீமைகள் ஓங்குமே- பெற்றோர்
      மற்றவர் போலினுந் தூங்கினால்.