பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே35

கொத்தாகி வரும்மொழியின் கூட்டத்தை
      நும்முன்னர்க் கொட்டு கின்றேன்
*எத்தாலும் பழிகளுமக் கேற்படுமேல்
      எனையுமவை சாரு மன்றோ?

பேசுங்கால் எழுதுங்காற் பிழைமலியக்
      காண்கின்றேன்; பிறழ்ந்து நாவை
வீசுங்கால் வரையுங்கால் வீணாவர்
      மற்றவரும்; விளைவைக் கண்டு
கூசுங்கள்; மாசுங்கள் மாதமிழ்க்குச்
      சேர்க்காதீர்; கோல வாழ்விற்
காசுங்கள் குறிக்கோளா? கசடறுதல்
      குறிக்கோளா? எதற்குக் கற்றீர்?

நாட்டவரைத் திருத்துதற்கு நல்லுரிமை
      பெற்றவர்நீர் நலிதல் நன்றோ?
வேட்டெழுந்து மற்றவரா விளக்கியுமைத்
      திருத்துவது? வெட்கம்! வெட்கம்!
நாட்டமுடன் முயன்றுரிய நலங்களெலாம்
      தகுதியெலாம் நயந்து கொள்க
*கோட்டமது தவிர்த்திடுக கொண்டிருக்கும்
      பொறுப்புணர்ந்து கொண்டாற் போதும்.

இனவுணர்வை ஊட்டுவதும் மொழியுணர்வை
      ஏற்றுவதும் யார்பொ றுப்பு?
மனவுணர்வில் ஈருணர்வும் மதியுடையீர்
      நும்மிடமே வதிதல் காணேன்;
சினவுணர்வு கொள்ளாதீர்; சிறந்தபணி
      நமதன்றோ? சிந்தித் தாய்க;
எனவுமைநான் வேண்டுகின்றேன்; இனியேனும்
      பொறுப்புணர்க ஏற்றங் காண்க.


*கோட்டம் - வளைவு, குறைபாடு