பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே45

பண்ணிடுவர்; சுட்டெரிக்கும் பகற்பொழுதில்
      வரிசைதனிற் பிச்சை மாந்தர்
நண்ணுதல்போல் மகளிரெலாம் நடுத்தெருவில்
      காத்திருப்பர்; நடைதான் மிஞ்சும்.

விலையின்றி மனமிளகி ஈவதுபோல்
      வந்தவரை விரட்டு கின்றார்;
தலையொன்று குறையாமல் தருவதற்குப்
      பொருள்மிகவே தந்தி ருந்தும்
இலையென்று மொழிகின்றார் ஈவிரக்கம்
      இல்லாமல் ஏய்த்து நிற்பார்;
கலையென்று கவருவதைக் கற்றவர்கள்
      களியாட்டம் ஆடு கின்றார்.

இந்தநிலை மாறாதா? இழிவுநிலை
      தீராதா? எளிமை யாக
வந்தவர்கள் பொருள்வாங்கி வாழும்நிலை
      வாராதா? வாக்கு வாங்க
வந்தவர்கள், துயர்நீங்க வழியொன்றுஞ்
      செய்யாரா? வாடும் மக்கள்
நொந்தமனம் ஆறாதா? நூறாண்டு
      சென்றாலும் நோய்தீ ராதா?

விடுதலையும் பெற்றுவிட்டோம் விழாக்களையும்
      நடத்திவிட்டோம் விண்கூ டத்தில்
படுவிரைவில் ஏறிவிட்டோம் பலமுனையிற்
      சிறந்துவிட்டோம் பாழும் நாட்டிற்
கெடுதலையே காணுகிறோம் கீழ்மைகளே
      பூணுகிறோம் கிடக்கும் மக்கள்
படுதுயரந் தீரவில்லை பஞ்சங்கள்
      மாறவில்லை பயனே இல்லை.