பக்கம் எண் :

48கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

மறைவினிற் பெறுவ தில்லை
      மறந்துமே விடுவ தில்லை
குறைவறத் தொகையைப் பேசிக்
      கொடுத்தபின் எதுவுஞ் செய்வர்
நிறைவதை ஒருவர் மட்டும்
      கவர்ந்திடா நேர்மை யுண்டு
பிறருடன் தகுதிக் கேற்பப்
      பகிர்வதே பெருவ ழக்கம்.

உரியதோர் கல்வி கற்றார்
      உயரிய பதவி பெற்றார்
சிறியதாம் பணியி லுள்ளார்
      சீரிய கல்வி யில்லார்
சரிநிக ராவர் வைக்கும்
      கையூட்டுச் சாமி முன்னர்;
அரியதோர் செயலே யில்லை
      எதனையும் அதுவே செய்யும்.

அலுவலைக் குறைத்துக் கொண்டான்
      ஆசையைப் பெருக்கிக் கொண்டான்
பலபழி செய்தும் வாழ்வைப்
      பகட்டுதற் கெண்ணி விட்டான்
நலவழி நடப்ப தற்கு
      நாட்டமே அவனுக் கில்லை
சொலவொரு சொல்லு மில்லைத்
      தூய்மையை மாய்த்தே விட்டான்

தேவையைப் பெருக்கிக் கொண்டால்
      திசைகளும் மாறிப் போகும்;
ஆவலை வளர விட்டால்
      அதற்கென எல்லை யில்லை;
கோவழி எதுவோ அஃதே
      குடிவழி யாகுங் கண்டீர்
ஆவது கருதும் மாந்தர்க்
      காட்சியிற் கவனம் வேண்டும்.