பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே53

கருத்தாலே கருத்தெதிர்க்குங் கலையறியார்
      மன்றேறிக் கயவர் போலே
பெருத்தவசை பொழிகின்றார்; பிழைபட்ட
      செய்திகளைப் பேசு கின்றார்;
பொருத்தமிலாப் பொய்ம்மூட்டை பொதுவிடத்தில்
      அவிழ்க்கின்றார்; புண்ப டுத்தி
வருந்திடவே தனிமனித வாழ்க்கையினைத்
      திறனாய்வர்; வைது தீர்ப்பர்

அவைநடுவில் தகாமொழிகள் அருவருப்பைத்
      தருமொழிகள், அவர்ம னத்திற்
சுவையெனவே கொள்மொழிகள், சுடுமொழிகள்,
      இழிமொழிகள், தொகுத்தெ டுத்த
*நவைமொழிகள், பயனில்லா நகைமொழிகள்
      உதிர்ப்பவரால் நன்மை யுண்டோ?
இவைதவிர்க்கப் பொதுமக்கள் எழுச்சிகொளின்
      பொதுமேடை ஏற்றங் காணும்.

இழிமொழிகள் பழிமொழிகள் எடுத்துரைப்போன்
      பேசுகிறான் என்றால் நீவிர்
குழுமாதீர்; மனம்வெறுத்துக் கூடாமல்
      ஒதுக்கிவிடின் கொடியர் பேச
எழுவாரோ? நன்கொடைகள் ஈயாமல்
      எள்ளிவிடின் ஏது மேடை?
அழிவுதரும் இச்செயலை அழிப்பதற்கு
      நுமக்கன்றோ அறிவு வேண்டும்.

நன்மைகளை உருவாக்கும் நாட்டமுடன்
      வருவோர்க்கு நல்கல் வேண்டும்;
புன்மைகளை வளர்ப்பவர்கள் பொறுக்குவதைத்
      தின்பவர்கள் புகுவா ராகின்
தன்மையிலார் இவரென்று தருகொடையை
      நிறுத்திடுக தரங்கள் கெட்ட
புன்செயலுக் குடந்தையெனப் போகாதீர்
      நல்லுணர்வைப் போற்றி வாழ்க.


*தீய மொழிகள்