‘பட்டினியாற் சாகவிடேன் பாட்டாளி இனத்துக்குப் பாலும் வார்ப்பேன் தட்டழிய விடமாட்டேன் தரமளிக்குங் குடியொழிப்பேன் தாய்மே லாணை அட்டவணைத் திட்டங்கள் ஆயிரத்தின் மேலுண்’டென் றறைவர்; வெற்றி கிட்டியதும் தன்னலமே கிளைத்திருக்கும் பொதுநலமோ கெட்டு நிற்கும் வாக்களிக்கக் கையூட்டு வாங்குகிறோம் வெற்றியொடு வந்தோர் பின்னர் வாக்களித்த நம்மிடமே வட்டியொடு கையூட்டு வாங்கு கின்றார்; ஆக்கமுளார் அமைச்சரென ஆகிவிடின் நன்கொடையென் றதன்பேர் மாறும்; தீர்க்கவொரு வழியில்லை தேர்தலினால் விளைகின்ற தீமை யெல்லாம் எதுசெய்தும் வெற்றிபெற எண்ணுவதால் தேர்தலிலே இழிந்த போக்கைப் புதுமுறையிற் காணுகிறோம்; போடுகிற சீட்டுகளும் புகைந்து போகும் விதிமுறையும் வேறாகும் வேட்பாளர் சாதிகளும் வேறாய்த் தோன்றும் பதிவான சீட்டுகளிற் பலபெயர்கள் மாறிவரும் பறந்து போகும். கற்றறிந்து சிந்தித்துக் கண்டுணர்ந்து செயலாற்றும் கடமை வேண்டும்; பற்றழிந்த தொண்டுளத்தைப் பண்புளத்தைப் பொதுநலத்தைப் பாது காத்தல் உற்றவர்க்குக் கடமையென உளத்தூய்மை முறைமையென உணர்ந்து விட்டால் பெற்றதொரு விடுதலைக்குப் பெருமைவரும் தேர்தலுக்கும் பெருமை யுண்டு |