பக்கம் எண் :

76கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

கட்டிய தாலி தொங்குங்
      கழுத்தினர் இளையர் என்னா
தெட்டிய மட்டுங் கொன்றார்
      இழிந்தசிங் களத்து மாக்கள்

ஆவணத் தெருவிற் கொள்ளை
      அளியவர் மனையிற் கொள்ளை
காவலர் திருட ரானாற்
      களவுகள் நிற்ப தேது?
தாவரும் மாந்த ரில்லம்
      தமிழர்தம் தொழிலார் கூடம்
யாவையுஞ் சாம்ப ராக
      ஆணவத் தீயர் செய்தார்

பகலிலே கொள்ளை யிட்டார்
      பதறிடக் கொலைகள் செய்தார்
தகவிலார் சிங்க ளத்தார்
      தணிவிலா வெறிய ராகி
மகளிர்தங் கற்பைத் தின்று
      விலங்கென மாறி நின்றார்
பகிர்ந்திடும் உரிமைக் காகப்
      பாடெலாம் நீவிர் பெற்றீர்

நாடனெ எமக்கொன் றில்லேம்
      நற்றமிழ் மாந்தர்க் குற்ற
கேடுகள் களைவ தற்குக்
      கிளர்ந்தெழும் நிலையு மில்லேம்
வீடண ரிடையே வாழ்வேம்
      வெந்துழல் மனத்த ராகிச்
சாடுத லன்றிக் கைகள்
      தந்திட வழியே இல்லை