மாறிய போக்கினைக் கற்றனரே- உயர் மான வுணர்ச்சியைச் செற்றனரே கூறிய நீதிகள் எவ்வளவோ-அவை கூறுவர் மேடையில் அவ்வளவே தந்நலம் ஒன்றையே தேடுகிறார்- அதைச் சட்டமென் றாக்கிட நாடுகிறார் என்னதான் செய்யினும் நெஞ்சினிலே-முனம் ஏற்றுகி றாரவர் வஞ்சனையே பன்னிய நல்லறம் நீக்கினரே-மனப் பண்புகள் யாவையும் போக்கினரே இந்நிலை கண்டுளம் வாடுகிறேன் அதை எற்றித் துவைத்திடப் பாடுகிறேன். எங்கெது காணினும் வஞ்சமடா- அதை எப்படித் தாங்கிடும் நெஞ்சமடா இங்கெவர் போக்கிலுங் குற்றமடா-இதை எண்ணிடும் போதெலாம் செற்றமடா எங்கணுங் கீழ்மையைச் சாடிடுவேன்-மனம் ஏற்றம் பெறக்கவி பாடிடுவேன் பொங்குக பண்புகள் பொங்குகவே-நலம் பூத்துப் பொலிந்துவி ளங்குகவே நாயினுங் கீழென வாழ்வதுவோ-திரு நாட்டின் பெரும்புகழ் சாய்வதுவோ? ஈயென எங்கணுந் தோய்வதுவோ?- மனம் ஈனத் தனத்தினிற் பாய்வதுவோ? போயெதிர் காலத்தை நோக்குகிறேன்-மனம் புண்பட்டுப் போவதால் தாக்குகிறேன் வாயினை எப்படி மூடிடுவேன்?-உயர் வாய்மையைக் காத்திடப் பாடிடுவேன் |