சொல்லிப் பழகுமொழி மெல்லத் தமிழாகி இல்லைநிகர் என்ன இயலாய்க் கனிந்ததுகாண்; இவ்வண்ணம் முத்தமிழாய் ஏற்றம் பெறுமொழியை எவ்வண்ணம் ஏத்திப் புகழ்வோம்நாம்? அம்மொழியில் கூத்தும் இசையுங் குறிக்கின்ற நூலெங்கே? ஏத்தும் இயல்நூலில் ஏனையவை தாமெங்கே? பாழுங் கடல்கோளும் பாவிப் பகைக்குலமும் சூழுங் கொடுவினையால் சொல்லரிய ஏடுகள்தாம் காணா தொழிந்தனவே; கண்மூடிக் கொள்கையினால் மாணாச் செயல்செய்தோம் மற்றும் பலஇழந்தோம்; ஆடிப் பெருக்கிலிட்டோம் அந்தோ நெருப்பிலிட்டோம் வேடிக்கை மாந்தர் விளையாட்டை என்னென்போம்! அஞ்சியஞ்சிச் சாகாமல் ஆளடிமை யாகாமல் எஞ்சியவை காப்போம் இனி. கவியரங்கம் - செந்திற் குமார நாடார் கல்லூரி விருதுநகர் |