பக்கம் எண் :

12கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

3. தமிழ் காப்போம்

எண்ணுடையாள், எழுத்துடையாள், காலங் காணா
      எழிலுடையாள், இளைமையினாள், கோலங் கண்டு
கண்ணுடையார் எனவாழ்ந்தோம்; ஆனால் இன்று
      கண்ணொன்றை இழந்து விட்டோம்; கீழ்வாய் என்னும்
எண்ணறிவார் எவருள்ளார்? தமிழர் கண்ட
      எண்வடிவம் மறைந்துவரும் நிலைமை கண்டோம்
புண்ணுடைய நெஞ்சுடையோம்; மாற்றார் ஆட்சி
      புகுந்தமையால் விளைந்தவொரு தீமை யன்றோ?

எஞ்சியுள எழுத்தேனும் முன்னோர் கண்ட
      இயல்புடனே நிலைத்திடுதற் குறுதி யில்லை;
வஞ்சமனம் படைத்தவர்தாம் வேற்று நாட்டு
      வரிவடிவைப் புகுத்துதற்கு முயலு கின்றார்;
நெஞ்சமிதை நினைந்துவிடின் வெந்து போகும்;
      நெறிகெட்ட இம்முறைதான் என்று சாகும்?
அஞ்சுவது கெஞ்சுவது மடமை யாகும்;
      ஆர்ப்பரித்துக் கேட்பதுதான் கடமை யாகும்

இந்நாட்டிற் குரியனவென் றியம்பு கின்ற
      ஈரேழு மொழிகளுக்கும் உரிமை வேண்டும்
*வெந்காட்ட ஒருமொழியும் அதன்மே லேறி
      வீற்றிருக்க ஒருமொழியும் வேண்டா! வேண்டா!!
என்னாட்டிற் கலைக்கூடம் ஆட்சி மன்றம்
      எத்துறையும் தமிழ்மொழியின் ஆட்சிவேண்டும்;
இந்நாட்டம் நிறைவெய்த வில்லை என்றால்
      இருந்தென்ன வாழ்ந்தென்ன சாவே மேலாம்.


1. வெந்-முதுகு