12 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
3. தமிழ் காப்போம் எண்ணுடையாள், எழுத்துடையாள், காலங் காணா எழிலுடையாள், இளைமையினாள், கோலங் கண்டு கண்ணுடையார் எனவாழ்ந்தோம்; ஆனால் இன்று கண்ணொன்றை இழந்து விட்டோம்; கீழ்வாய் என்னும் எண்ணறிவார் எவருள்ளார்? தமிழர் கண்ட எண்வடிவம் மறைந்துவரும் நிலைமை கண்டோம் புண்ணுடைய நெஞ்சுடையோம்; மாற்றார் ஆட்சி புகுந்தமையால் விளைந்தவொரு தீமை யன்றோ? எஞ்சியுள எழுத்தேனும் முன்னோர் கண்ட இயல்புடனே நிலைத்திடுதற் குறுதி யில்லை; வஞ்சமனம் படைத்தவர்தாம் வேற்று நாட்டு வரிவடிவைப் புகுத்துதற்கு முயலு கின்றார்; நெஞ்சமிதை நினைந்துவிடின் வெந்து போகும்; நெறிகெட்ட இம்முறைதான் என்று சாகும்? அஞ்சுவது கெஞ்சுவது மடமை யாகும்; ஆர்ப்பரித்துக் கேட்பதுதான் கடமை யாகும் இந்நாட்டிற் குரியனவென் றியம்பு கின்ற ஈரேழு மொழிகளுக்கும் உரிமை வேண்டும் *வெந்காட்ட ஒருமொழியும் அதன்மே லேறி வீற்றிருக்க ஒருமொழியும் வேண்டா! வேண்டா!! என்னாட்டிற் கலைக்கூடம் ஆட்சி மன்றம் எத்துறையும் தமிழ்மொழியின் ஆட்சிவேண்டும்; இந்நாட்டம் நிறைவெய்த வில்லை என்றால் இருந்தென்ன வாழ்ந்தென்ன சாவே மேலாம்.
1. வெந்-முதுகு |