116 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
4. பகடைக் காய் ஏட்டளவில் பாட்டெழுதிப் புகழ்ச்சி சொல்லி ஏற்றமெலாம் எடுத்துரைத்து வியந்து கூறிக் காட்டுகிறோம் உழவன்றன் பெருமை எல்லாம்; கண்கட்டு வித்தையினால் கால மெல்லாம் ஒட்டுகிறோம் கற்பனையில் உலவு கின்றோம் உண்மையினைத் திரையிட்டு மூடு கின்றோம்; வாட்டமுடன் அவன்வாழுங் குடிலுக் குள்ளே வளர்துயரைத் துடைப்பதற்கு மறந்து விட்டோம். உழுகின்றான் விதைக்கின்றான் நீரைப் பாய்ச்சி உழைக்கின்றான் காக்கின்றான் ஆனால் நாளும் அழுகின்றான் உணவின்றி; பெற்ற மக்கள் அலைகின்றார் என்புருவில்; பேசாத் தெய்வம் தொழுகின்றோம் முப்பொழுதும்; பேசுந் தெய்வம் துணியின்றி உணவின்றிக் கந்தல் கட்டிப் பழுதுண்ட சிலைகளெனத் திரியக் கண்டோம்; பாடுகின்றோம் அவன்பெருமை என்னே விந்தை! உழுகின்ற காளைக்கு வைக்கோ லேனும் ஒருசிறிது கிடைத்து விடும்; வாழ்நா ளெல்லாம் உழுதொழிலில் கழிக்கின்றோன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாதென் றுலகஞ் சொல்லும் பழமொழியைக் கேட்டதினிப் போதும் போதும் பாரிலவன் வாழ்வினையும் பெருக்கல் வேண்டும் முழுமையொடு வாழவழி வகுத்தல் வேண்டும் முயலாது கழித்தலினி வேண்டா வேண்டா |