பக்கம் எண் :

120கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

7. பூக்கட்டும் புதுமை

நெறிபிறழா உழைப்பதனைப் பெருக்கி நின்றால்
      நேரியநல் லுரிமைகளை வழங்கல் வேண்டும்;
உரிமைகளைப் பறித்தடக்க எண்ணு வீரேல்
      உணர்ச்சிகளே பொங்கிஎழும் புரட்சி ஓங்கும்;
சரிபிழைகள் தெரியாத நிலைமை தோன்றும்;
      சமர்வருமுன் பெருகட்டும் உரிமை யாவும்
சொரிமழைபோல் பொழியட்டும் உழைப்பை மாந்தர்;
      சுடர்விட்டு மிளிரட்டும் நமது நாடு

சிரிக்கட்டும் மக்களெலாம் மகிழ்வு கொள்வோம்;
      சிரிப்பளவில் நில்லாமல் உழைப்பைக் கொஞ்சம்
பெருக்கட்டும்; பெருகியதாற் பெற்ற இன்பம்
      பெருகட்டும் நிலைக்கட்டும்; சோம்ப லைத்தான்
முறிக்கட்டும்; முறிக்கியபின் உழைப்பு நாட்டில்
      முளைக்கட்டும்; முளைவிடுமேல் வாழ்வும் ஓங்கும்;
இருக்கட்டும் நமக்கென்ன என்றி ருந்தால்
      இனிக்கெட்டுப் போவதலால் வழியே இல்லை.

பூக்கின்ற மலர்களெலாம் பூக்கள் அல்ல
      புதியனவாய் வருவவெலாம் புதுமை அல்ல
ஈர்க்கின்ற மணம்பரப்பும் மலர்க ளைத்தாம்
      எல்லாரும் போற்றிடுவர்; நலம்ப ரப்பிக்
காக்கின்ற புதுமையைத்தான் ஏற்பர் சான்றோர்;
      காகிதப்பூப் போல்வீரியும் புதுமை எல்லாம்
போக்குதலே அறிவுடைமை; மயங்கி நின்று
      புதுமைஎனும் பேராலே வீழ்தல் வேண்டா.