பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 129

13. திரும்பிப் பார்

காலங்கள் மாறிடலாம்; ஒரு நாள் கண்ட
      கருத்துகளும் மாறிடலாம்; பூண்டு கொண்ட
கோலங்கள் மாறிடலாம்; சட்டம் கூறும்
      கொள்கைகளும் மாறிடலாம்; வாழும் இந்த
ஞாலங்கள் மாறிடலாம்; வாழ்ந்து வந்த
      நாகரிகம் மாறிடலாம்; மானம் மற்றும்
சீலங்கள் மாறிடுமேல் சீசீ என்ற
      சிறுமைக்கே ஆட்படுவாய் சீரி ழந்தே.

ஆடைகளை மாற்றுகிறாய்; முடியைக் கூட
      அருவருக்க மாற்றுகிறாய்; பேசு கின்ற
மேடைகளை மாற்றுகிறாய்; வீரங் காட்டும்
      மீசையினை மாற்றுகிறாய்; தொலைந்து போபோ
கோடையினைக் குளிர்ச்சிதரும் பருவ மென்று
      குவவுகின்ற தமிழ்மகனே உன்னி னந்தான்
வாடுவதை மாற்றுகிற உணர்வே யின்றி
      மயக்கத்திற் சிக்குண்டு திரிகின் றாயே.

ஊறிவருங் குருதியினைக் கெடுத்துக் கொண்டாய்
      உன்னினத்தின் மானத்தை ஒதுக்கி விட்டாய்
சீறிவரும் அரியேற்றின் குலத்தில் வந்த
      சிறப்பினையும் மறந்துவிட்டாய்; தன்ன லத்தால்
மீறிவரும் ஆவலினால் கவர்ச்சிக் காளாய்
      மீளாத பழிசுமந்தாய்; முகிலிற் காணும்
தேருருவம் பயன்படுமா போர்க்க ளத்தில்?
      தெளியாத தமிழ்மகனே தெளிந்து நிற்பாய்.