புதியதொரு விதிசெய்வோம் | 131 |
14. அந்நாள் எந்நாள்? வியப்புமிகுங் கலைத்திறமை கொண்டி லங்கும் வியன்கோவில் எடுப்பித்தான் இராச ராசன்; நயத்தக்கான் திருவுருவைச் சிலையில் ஆக்கி நனிவிருப்பால் அச்சிலையைக் கோவி லுக்குள் அயற்புறத்தே சுவரெடுத்து வைக்க எண்ணி அருமுயற்சி மேற்கொண்டார் முடிய வில்லை; மயக்கநிலை தெளியவில்லை; அடிமை இன்னும் மாறவில்லை உரிமைபெறும் அந்நாள் எந்நாள்? பொன்னிவளக் கரையுடையான் தஞ்சைப் பேரூர் பொலிவுபெறப் பெருங்கோவில் ஒன்ற மைத்தான்; அன்னதிருக் கோவில்நலம் புரந்து காக்கும் ஆளுரிமை கங்கைக்கே உரிய தென்றால் என்னமுறை யீதென்று துணிந்து கேட்க, எமதுடைமை எமக்கென்றே உரிமை கோர இன்னுமுணர் வெழவில்லை தமிழர்க் கந்தோ! எப்பொழுது விழிப்பாரோ? அந்நாள் எந்நாள்? அழல்வடிவக் கடவுளுக்குக் கோவில் ஆக்கி, அவன்செவியில் தேவார ஒலியைக் கூட்டி, நிழல்படியாக் கோபுரமும் கட்டி வைத்து, நெடுந்தெருவில் நிற்கின்றான் இராச ராசன்; நிழல்கொடுக்கும் வெண்குடைக்கீழ் உலகம் ஆண்டான் நிற்கின்றான் குடையின்றித் தஞ்சை மண்ணில்; அழிதருமிச் செயல்தீரத் தமிழர் இங்கே ஆர்த்தெழும்நாள் எந்நாளோ? அந்நாள் எந்நாள்? |