பக்கம் எண் :

134கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

களப்பலி யாகக் காளையர் உயிர்கள்
எத்தனை எத்தனை ஈந்தனர் உவந்தே;
அத்தனை உயிரும் எவர்தம் உயிராம்?
உன்னுடன் பிறந்தார் உன்னலம் நினைந்தார்
தம்முயிர் அன்றோ? தமிழ்நலங் காக்க
எரியிடைப் புகுந்துடல் கருகிட மடிந்தனர்
அரிநிகர் தோழர் அவரெலாம் உன்னினம்!
கொடுஞ்சிறைக் கோட்டம் இடஞ்சிறி தாகப்
புகுந்தது நிறைந்தது புலிநிகர் கூட்டம்!
முந்திய போர்களிற் சிந்திய குருதிகள்
சிந்தைக் கல்லிற் செதுக்கிய வரிகள்
வரலாற் றேட்டில் வாழ்வன காணுதி
அரியேற் றுள்ளம் அவற்றால் வாய்த்திடும்
அழியா வரிகளை அடிக்கடி படித்திடு
விழிபோல் அவற்றை விரும்பிப் போற்றிடு!
பழகிய தமிழ்மொழி பழுதுறா தோங்கிட
இளகிய தமிழினம் இணையிலா திலங்கிடக்
கழகம் ஒன்றே காத்திட வல்லது;
கழகம் காத்திடல் காளையே நின்கடன்;
பாசறை அமைத்ததில் பயின்றிடு போர்முறை
நீசரை எதிர்த்திட நிமிர்த்திடு தோள்கள்;
சென்ற களமெலாம் வென்றது நின்னினம்
இன்றதை மறந்தனை இனியதை நினைந்தெழு!
நின்பாற் சோர்வு நேர்ந்துள தறிவேன்;
அன்பநின் சோர்வுக் கடிப்படை தெரிவேன்;
அதனாற் சோர்வுறல் அழகோ? உன்பணி
எதனால் மறந்தனை? எவர்க்கது தீமை?
நடந்ததை மறந்திடு நடப்பதை நினைந்தெழு