பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 137

விஞ்சும் இயல்புடையான் துஞ்சுதலைத் தான்விழையான்;
அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்;
தக்கும் புகழென்றால் தாவி அதுபெறவே
பொக்கை உயிர்போக்கிப் பொன்றாது நின்றிருப்பான்
சூழும் பழியென்றால் தூவென் றுமிழ்ந்தொதுக்கி
ஆழி உலகம் அதுபெறினும் தான்வேண்டான்;
தன்னலம் ஒன்றைத் தவிர்த்திடுவான் மற்றவர்
தந்நலம் வேண்டித் தனிமுயற்சி மேற்கொள்வான்
யாதுமென் ஊரென்பான் யாவரும் கேளிரென்பான்
தீதறியான் சூதறியான் சாதலும் கண்டஞ்சான்
தன்னிற் பெரியோரைத் தான்வியந்து நின்றாலும்
தன்னிற் சிறியோரைச் சற்றும் இகழ்ந்தறியான்;
வாழ்வில் வருமானம் வாய்ப்பின் அதுவேண்டான்
*சாவில் வருமானம் ஒன்றே சரியென்பான்;
ஒன்றே குலமென்றான் தேவன் ஒருவனென்றான்
நன்றே இறையுணர்வை நாட்டிற் குணர்த்திவந்தான்
வாழ்ந்த தமிழினத்தின் வாய்த்த வரலாறு
சூழ்ந்து சொலக்கருதின் சொல்லில் அடங்காது;
நாகரிகத் தொட்டில் நமது திருநாடு
வாகுடனே வாழ்ந்த வரலா றிதுவாகும்;
வாழ்ந்த வரலாற்றில் வந்த சிலசொன்னேன்
வீழ்ந்த வரலாறு விண்டால் மனம்நோகும்;
முச்சங்கம் கண்டு மொழிவளர்த்தோன் எப்பகையின்
அச்சங்க ளின்றி அமைதியில் நூல்படைத்தோன்
ஆங்கிலத்தால் ஆரியத்தால் ஆதிக்க இந்தியினால்
தீங்குவரு மோவென்று திண்டாடி நிற்கின்றான்
பண்படுத்தும் நூல்கள் பலதந்தோன் சான்றோரைப்
புண்படுத்தி மன்பதையின் பண்பழிக்கும் ஏடுகளே
இன்றுகுவிக் கின்றான்; இளையோர் உணர்வுகளைக்
கொன்று கெடுத்துவிட்டுக் கூசாமல் பேசுகின்றான்;
காசுக்கும் மாசுக்கும் கண்ட படிஎழுதும்;


* சாவில் வருமானம் - இறந்தால் மானம் வரும்.