பக்கம் எண் :

142கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

18. ஆரியப் பேரரசு

அணிந்திருக்கும் பூணூல்கள் நூல்க ளல்ல
      ஆரியத்துப் பேரரசின் எல்லைக் கோடு;
தணிந்துரைக்கும் அவர்மொழிகள் அணுவின் குண்டு;
      தருப்பைப்புல் ஏவுகணை; நெற்றி யின்மேல்
அணிந்திருக்குந் திருநீறோ இடுக்கித் தாக்கும்
      ஆயுதங்கள்; திருநாமம் கழும ரங்கள்;
நினைந்தெடுத்து விழிப்பாகக் கட்டி வைத்த
      நெடியமதிற் கோட்டைகளாம் நான்கு வேதம்

ஆலயங்கள் அவ்வரசு செங்கோ லோச்சும்
      அரண்மனையாம்; சிலைகள்வெளி நாட்டுத் தூதர்;
நாலுவகை வருணங்கள் பகைமு டிக்கும்
      நாற்படையாம்; பஞ்சாங்கம் சட்ட நூலாம்;
மேலுலகம் புராணங்கள் சாத்தி ரங்கள்
      மேற்படியார் விளம்பரஞ்சிசெய் துறைக ளாகும்;
மாலுடைய மதம்நடன மங்கை யாகும்;
      மற்றுமுச்சிக் குடுமியொரு கொடியே யாகும்.

ஆலமரம் அரசமரம் இவற்றின் கீழே
      அமர்சிலைகள் சிற்றரசாம்; உடைக்குந் தேங்காய்
பாலொடுநெய் ஊர்மக்கள் கப்ப மாகும்;
      பறையோசை மந்திரங்கள் அரசின் ஆணை;
மேலுலகம் கீழுலகம் சிறைக ளாகும்;
      மேதைகள்போல் எழுதிவருஞ் செய்தித் தாள்கள்
வேலொடுவாட் படைகளாகும்; காஞ்சிப் பீடம்
      வெற்றிபெற மறைசூழும் மன்ற மாகும்.