152 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
22. ஒற்றுமை உருப்படுமா? வளமனை பலவும் வருபொருட் டொகையும் உளநல் முதியோன் ஒருவன்; அவற்குக் கற்றறி மக்கள் காளையர் நால்வர் உற்றனர் மணம்பெறத் தக்கநற் பருவம்; மகட்கொடை வேண்டி மருகும் நாளில் நகத்தகும் நண்பன் நவின்றனன் சிலசொல்; ‘நால்வரும் தனித்தனி நங்கையர் மணப்பின் பாழ்படும் ஒற்றுமை; பழுதுறும் அமைதி; வருத்தமும் குழப்பமும் வந்துனைச் சூழும்; ஒருத்தியைக் கொணரின் ஒற்றுமை வாழும்; பெண்டிர் நால்வர் சண்டைகள் இடுவர் மண்டைகள் உடைபடும் அண்டையர் நகைப்பர்; பலமொழி பேசும் பலப்பல மாநிலம் நலமுற ஒற்றுமை நிலவுறச் சான்றோர் ஒருமொழி கொணர்தலை உற்று நோக்குதி! அறிவிலாச் செயலா அவரெலாம் செய்வர்? அதனால் நீயும் அரிவை ஒருத்தியை மதலை நால்வர்க்கும் மணமுடிப் பாயே! 2.7.1979 |