பக்கம் எண் :

162கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

மீட்டியநல் யாழிசையைக் கேட்டு மைந்தன்
      மெய்ம்மறந்தொன் மடியமர்ந்து சிலைபோல் தோன்ற,
ஊட்டியநற் சுவைமறந்து செயல்ம றந்தே
      உலகினையும் மறந்திருந்தேன்; யாழின் ஓசை
காட்டியஓர் உலகினில்நான் மிதந்து வந்தேன்;
      கனவுலகம் நனவுலகம் அறிய கில்லேன்;
பாட்டிசைக்கு மயங்காத மாந்த ருண்டோ?
      படைத்தசெவிப் பொறிப்பயனைப் பெற்றேன் பெற்றேன்.

விழிப்பொறிக்கு விருந்தளித்தாய் காட்சி தந்து;
      வீணையினால் விருந்தளித்தாய் செவிப் பொறிக்குக்,
குழைத்தெடுத்த பச்சரிசிப் பொங்கலிட்டுக்
      கூர்சுவையால் வாய்ப்பொறிக்கு விருந்த ளித்தாய்;
தெளிர்த்தநரம் பிசைவிடுத்துக் கொவ்வைவாயின்
      தேன்மொழியால் நின்குரலாற் பாடி யின்பம்
திளைத்திருக்கக் கருத்தினுக்கும் விருந்த ளிப்பாய்
      செங்கதிர்க்கு வாழ்த்திசைப்பாய் மாதே என்றேன்.

குழைவித்த மென்னரம்பின் யாழ்விடுத்துக்
      குரலிசையால் இனிமையினைச் செவியில் வார்த்தாள்,
மழைநிகர்த்த குழலிதன்வாய் மலர்த்துச் செந்தேன்
      மாரியென இசை பொழிந்தான்; முன்னர் மீட்டுக்
கழைபிழிந்த சாறெனுமா றிசைத்த யாழ்தான்
      கலக்கமுறத் தோல்விபெற வென்றி கொண்டாள்;
கழைகொடுத்த குழலிசையோ எனம யங்கக்
      களிகூர மிடற்றிசையால் நனையச் செய்தாள்