பக்கம் எண் :

168கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

31. விண்வெளிப் போருக்கா விஞ்ஞானம்?

அணுவைப் பிளந்திடும் ஆற்றலைப் பெற்றனன்
      ஆறறி வேந்திய மாந்தனென்றார்- ஆய்வில்
நுணுகிப் புகுந்திடும் நூலறி வாளனை
      நூறு வகைப்பட வாழ்த்தி நின்றேன்.

பாருக்கு நல்லன வாய்த்திடு மேயெனப்
      பச்சை மனத்தினுள் நச்சிநின்றேன்-அமைதி
வேருக்குள் பாய்ச்சினன் காய்ச்சிய நீரினை
      வெந்து தளர்ந்துளம் மாழ்கிநின்றேன்

யாருக்கும் யாவையும் வாய்த்திடு மேயென
      யானொரு கற்பனை செய்து கொண்டேன்-விண்ணில்
போருக்கு வல்லவன் யாரெனப் பார்த்திடப்
      போர்ப்பறை கொட்டினன் கேட்டுநொந்தேன்

ஆடவர் அஞ்சிட மாதரும் அஞ்சிட
      ஆங்கிளஞ் சேய்களும் அஞ்சிநின்றார்-எந்த
நாடரும் அஞ்சிட நாய்வெறி கொண்டதால்
      நாளெலாம் அஞ்சியே வாடுகின்றார்

மண்ணுங் கெடுத்தனர் விண்ணுங் கெடுத்தனர்
      வாரியின் நீருங் கெடுத்தனரே -தீய
எண்ணம் உடுத்தவர் என்னென்ன கேடுகள்
      ஈங்கினும் செய்யப் படித்தனரோ?