பக்கம் எண் :

170கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

32. சான்றோர் செய்த பிழை

கற்றில ராகினும், மற்றுயர் குணநலன்
அற்றன ராகினும், அரும்பொருள் பெற்றவர்
முற்றநன் மதிப்பினைப் பெற்றிடல் காண்குதும்;
தமக்கென ஒருதொழில் தாங்கில ராகி
உமக்கும் எமக்கும் உருகுதல் போல
மயக்குறப் பேசி மறுநாள்மாறி
நாளொரு மேடையில் நடைபயில் அரசியல்
வாதியர் தமக்கும் வழங்குவர் மதிப்பு;
தடவிய பொடியால் தகதக முகத்து
நடிகர் தமக்கும் நன்மதிப் பளிப்பார்;
ஆன்றவிந் தடங்கிய சான்றோர் தமக்கோ
ஏன்தர மறந்தனர் ஏற்றநன் மதிப்பை?
பெரும்பொருள் தேடா திருந்தனர் அது பிழை;
அரசியல் ஒந்தி ஆகிலர் அது பிழை;
பொடியால் உடையால் புதுமெரு கேற்றும்
நடிகர் ஆகவும் நயந்திலர் அதுபிழை;
இற்றை நிலையினை எண்ணுங் காலை
பற்றி எரியும்என் பாழ்படு நெஞ்சே.

27.4.1978