பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 171

33. தேர்தல் நினைவு

இரவெனும் நங்கை வந்தாள்
      என்விழி துயிற்ற எண்ணிப்
பிறையினிற் குளிரெ டுத்துப்
      பிச்சியில் மணமெ டுத்து
வருமிளந் தென்றல் கொண்டு
      வீசினள்; வைய மெல்லாம்
இருளிய பின்னும் என்றன்
      இமைகளோ இணைய வில்லை.

தேர்தலை நினைந்து விட்டேன்
      சிந்தையும் உறங்க வில்லை;
நேர்மையை அங்குக் காணேன்
      பொய்ம்மையே நெளியக் கண்டேன்;
தேர்வரும் நாளைப் போலத்
      தெருவெலாம் கூச்சல் கேட்டேன்
ஊர்வலம் பலவுங் கண்டேன்
      உண்மையே காண வில்லை.

உண்மையே சிறிது மில்லார்
      ஊரினை ஆள வந்தால்
கண்ணியம் நிலைப்ப தெங்கே?
      கயமைதான் ஓங்கி நிற்கும்;
பெண்மையை விலைக்கு விற்போர்
      கற்பினைப் பேச வந்தால்
மண்மிசை என்ன வாழும்?
      மதியுளர் நகைப்ப ரன்றோ?