பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 175

35. நன்றி காட்டுக

கடவுளின் பெயரைச் சொல்லிக்
      கட்டிய கதைக ளெல்லாம்
மடமையென் றெடுத்துச் சொல்லி
      மாபெரும் போர் தொடுத்துக்
கடமையை ஆற்றி நின்ற
      கதிர்நிகர் பெரியார் கொள்கை
சுடர்விடப் பாடி வந்த
      தொழத்தகு பாட்டு வேந்தன்.

சுயமரி யாதைக் காரன்
      சோர்வினை யறியா வீரன்;
மயலுறு பகைவர் நெஞ்சம்
      மருண்டிடச் செய்யுந் தோளன்
நயமிகு தமிழர் பண்பில்
      நஞ்சினைக் கலக்கும் வஞ்சக்
கயவரைச் சுட்டெ றிக்கும்
      கனல்பொழி விழிகள் கொண்டான்.

நறுக்கிய கருப்பு மீசை
      நரிக்குண மாக்கள் வாலை
நறுக்கிடும் தோற்றம் காட்டும்;
      நற்றமிழ் மாந்தர் வாழ்வில்
குறுக்கிடும் பகைமை யெல்லாம்
      குலைநடுங் கிடவே செய்யும்;
முறுக்கிய நரம்பில் நல்ல
      முத்தமிழ்க் குருதி பாய்ச்சும்.