பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 177

36. கண்ணீரை யார் துடைப்பர்?

பாவெல்லாம் படையாக்கிப் பகைமை யோட்டும்
      பாவேந்தே எங்குலத்தின் தலைவா இன்று
நாவெல்லாம் புலர்ந்திருக்க விழிநீர் சிந்த
      நாடெல்லாங் கவிவாணர் திகைத்து நிற்கக்
கோவென்று வாய்ப்புலம்பக் கையற் றேங்கக்
      கொற்றவனே கற்றவனே மறைந்தா விட்டாய்!
சாவொன்றும் புதுவதன்று தெரியும்; ஆனால்
      தமிழன்னை கண்ணீரை யார்து டைப்பார்?

கவிஞரெனப் பேர்படைத்த எங்கட் கெல்லாம்
      காவலன்யார்? செந்தமிழ்க்குத் தீங்கு செய்யப்
புவியிலெவர் நினைத்திடினுங் கனன்றெ ழுந்து
      புலிப்போத்தாய்த் தனைமறந்து தமிழ்நி னைந்து
கவிபொழிய வல்லான்யார்? இனிமே லிங்குக்
      கவிதைக்குப் பரம்பரையைப் படைப்போன் யார்யார்?
இவையெல்லாம் நினையுங்கா லுணர்வு விஞ்சி
      இறப்பென்னும் ஒருபாவி தொலைக என்போம்.

முழுநிலவே செங்கதிரே காலங் கண்டும்
      மூவாத தமிழ்ப் பொழிலில் ஆடிவந்த
அழகொழுகும் இளமையிலே உலக மாந்தர்
      ஆவியெலாங் குளிர்விக்குந் தென்றற் காற்றே
பழகுதமிழ்க் கனிமூன்றுஞ் சுவைத்துப் பார்த்துப்
      பாடிவந்த பூங்குயிலே மறைந்தாய் நாங்கள்
அழுதழுதும் வாராயோ? மீண்டு மிங்கே
      ஆடாயோ பாடாயோ? அந்தோ அந்தோ!