பக்கம் எண் :

18கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

5. உயிர் கொடுப்போம்

“இந்திமொழி பொது மொழியா ? தகுதி என்ன
      இருக்கின்ற தம்மொழிக்கு? குயில்கள் கூவும்
கொந்தலிழும் மலர்ச்சோலை தமிழர் நாடு;
      கோட்டானுக் கங்கென்ன வேலை?'' என்று
செந்தமிழும் பிறமொழியும் நன்கு கற்றோர்
      சீர்தூக்கி நன்குணர்ந்து மறுத்து ரைத்தார்;
எந்தவழி இந்திமொழி வந்த போதும்
      ஏற்பதிலை என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்.

அரசியலில் மூதறிஞர் மறுத்துச் சொன்னார்
      ஆய்வுரைகள் அறிவுரைகள் எழுதிப் பார்த்தார்;
முரசொலிக்கும் போர்க்களத்தில் நின்று நாளும்
      முழக்கமிடும் பேரறிஞர் எதிர்த்து நின்றார்;
உரமிகுந்த அறப்போர்கள் பல நடாத்தி
      உயிர்ப்பலிகள் பலகொடுத்தார்; எல்லாம் கண்டும்
இருள்மதியர் இந்திவெறி கொண்ட மாந்தர்
      இன்றுவரை கேளாராய் உலவு கின்றார்.

விரலைந்தும் தனித்தனியே இயங்கி நிற்கும்
      வேலேந்தும் பொழுதிலவை இணைந்து நிற்கும்;
தரமறந்த உரிமையுடன் மாநிலங்கள்
      தனித்தனியே இயங்கிவரும்; பகைவ ருங்கால்
உறவுணர்ந்து தோள்தந்தே இணைந்து நிற்கும்;
      ஒற்றுமைஎன் றிதனைத்தான் உரைப்பர் மேலோர்;
ஒருமைஎனும் பெயராலே விரல்கள் ஐந்தை
      ஊசியினால் தைப்பதற்கு முனைவா ருண்டோ?