பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்19

தத்தமது நாகரிகம் மொழிகள் பண்பு
      தனித்தன்மை எள்ளளவும் கெடுத லின்றி
ஒத்துரிமை உணர்வுடனே மாநி லங்கள்
      உளமொன்றி வாழ்வதுதான் நமது வேட்கை;
பித்தரென வெறியரென ஒருமை என்ற
      பெயர்சொல்லி இந்தியினால் தைத்து விட்டால்
எத்தனைநாள் ஒட்டிருக்கும்? குனிந்த மாந்தர்
      இருதோளும் விரித்தெழுந்தால் தெறித்துப் போகும்.

உறவுக்குக் கைகொடுப்போம் எனினும் எங்கள்
      உரிமைக்கும் குரல்கொடுப்போம்; தென்பு லத்தின்
மறுதிக்கில் வாழ்வோர்கள் குரலைக் கேட்க
      மறுத்துவிடின் உயிர்கொடுப்போம்; சிறையில் மாண்ட
திறமிக்க நடராசன் தால முத்து
      தென்னாட்டில் பலருள்ளார்; இன்று வாழ்வோர்
உரிமைக்கே உயிர்கொடுப்போம் என்பர் நாளை
      உணர்வுடையார் என்சொல்வார்? யாரே கண்டார்.