பக்கம் எண் :

182கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

ஏர்நடத்தி, விதைவிதைத்து, நாற்றுப் பாவி
      எருவிட்டுக், களையெடுத்து நாளும் நாளும்
நீர்கொடுத்துக் காத்திருந்து பாடு பட்டோன்
      நெடுந்துன்பம் உறக்கண்டான்; அதனால் இந்தப்
பார்நடக்க உணவளித்து வள்ள லாகிப்
      பசிகளைந்து வாழ்கின்ற இன்பங் கண்டான்
கூர்படைத்த அறிவாளர் பட்ட துன்பம்
      கொடுத்தவையே நாம்நுகரும் இன்ப மெல்லாம்.

குறுமலர்க்கண் சிறுமகனைக் கொஞ்சும் தாய்க்குக்
      கூடிவரும் இன்பத்திற் களவே இல்லை;
கருவுயிர்க்கும் போதவள்தான் அடையும் துன்பம்
      கணக்குண்டோ? பகலுக்கு வெம்மை என்றால்
இரவினுக்குத் தண்மையன்றோ? உலகில் என்றும்
      இருகூறும் கலந்திருக்கும்; ஒன்றில் ஒன்றாம்
உறுதுயர்க்கு மறுபுறமே இன்ப மாகும்
      உற்றறிவார் தமக்கேஇவ் வுண்மை தோன்றும்.

இன்பமெது வெனவுணர்ந்து தெளிந்து சொல்ல
      எவராலும் இயலாது; போதும் போதும்
என்பதிலே காண்கின்றான் ஒருவன் இன்பம்;
      எனைத்துநிதி பெற்றாலும் போதா தென்றே
தன்பெருவாய் திறந்தலைந்து பொருளைத் தேடித்
      தவிப்பதிலே மற்றொருவன் இன்பங் காண்பான்;
மன்பதையின் மனத்தளவே ஆகும் அல்லாள்
      மதிப்பிட்டுச் சொல்லுதற்கோர் வகையே இல்லை.

ஒருவனுக்கிங் கின்பமெனத் தோன்றும் ஒன்றே
      உறுதுன்ப மெனத்தோன்றும் மற்ற வர்க்கே;
ஒருநிலத்தில் இன்பமெனக் கொண்ட ஒன்றை
      ஒதுக்கிடுவர் மறுபுலத்தில் துன்பம் என்றே;
பெருவிருப்பால் இஃதொன்றே இன்பமென்பார்
      பிழையென்று மற்றொருவர் பிறிது சொல்வார்;
ஒருவருக்கும் புரியாத பொருளே யாகி
      உலகிலது சுழன்றுவரக் காணு கின்றோம்.